
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கவியரசன் இவர் மாவட்ட பாஜகவில் நெசவாளர் பிரிவு துணை தலைவராக இருக்கிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு முதல்லக்கம்பட்டியில் கறி எடுத்து விட்டு தனது காரில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது சில்வார்பட்டி அருகே மது போதையில் இருந்த 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்த வழியாக வந்த கவியரசனின் காரை வழிமறித்து அட்டூழியம் செய்துள்ளனர். இதனால் கவியரசனுக்கும், மதுபோதையில் இருந்த கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கார் கண்ணாடியை இளைஞர்கள் அடித்து உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்
இந்நிலையில் கவியரசன் உள்ளூரைச் சேர்ந்த தனது கட்சி நண்பரான முனியாண்டி (பாஜக மாவட்ட இளைஞர் பொறுப்பாளர்) என்பவரை அழைத்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த முனியாண்டி மது போதையில் இருந்த இளைஞர்களை மிரட்டி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் முனியாண்டிக்கு சொந்தமான வாட்டர் சப்ளை கடையை அடித்து உடைத்து கடையில் இருந்த பேனர் மற்றும் பூட்டுக்களை சேதப்படுத்தி உள்ளனர்.
பின்னர் இது குறித்து பாஜக பிரமுகர்களான கவியரசன் மற்றும் முனியாண்டி ஆகியோர் கார் கண்ணாடி மற்றும் கடை ஆகியவற்றை அடித்து உடைத்து கொலை மிரட்டல் விடுத்த சில்வார்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்து, விக்னேஷ், முத்துவேல் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீது தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தேவதானப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.