முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த பைபிள் மற்றும் குரான் நூல்கள் அகற்றப்பட்டுள்ளன.
மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாமின் மணிமண்டபம், அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பேக்கரும்பு என்னுமிடத்தில் மறைந்த அப்துல் கலாமுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
கலாமின் இந்த மணிமண்டபத்தை, பிரதமர் மோடி கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மணிமண்டபத்தில், மறைந்த குடியரசு தலைவர் அப்துல்கலாம், வீணை இசைப்பது போன்ற சிற்பம் ஒன்றை, பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்த சிலை அருகே பகவத் கீதை வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு வைகோ, ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் கலாமின் சிலைக்குகீழ் அவரது பேரன் சலீம், பைபிள் மற்றும் குரான் ஆகியவற்றை வைத்தார். அப்துல் கலாம் அனைவருக்கும் பொதுவானர், எனவே அவரது சிலைக்குக்கீழ் பைபிள், பகவத்கீதை, குரான் வைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
அப்துல் கலாமின் சிலையின்கீழ், பகவத்கீதை, பைபிள், குரான் வைக்கப்பட்டதற்கு மதிமுக பொது செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் எதிர்ப்பு தெரிவித்தனர். கலாமின் சிலைக்குக்கீழ் திருக்குறள் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.
அதேபோல், இந்து மக்கள் கட்சி சார்பிலும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், கலாமின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த திருக்குரான், பைபிள் ஆகிய இரண்டு நூல்களும் அகற்றப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காகவே பைபிள், குரான் ஆகிய இரண்டு நூல்களும் அகற்றப்பட்டதாகவும், இதில் அரசியல் வேண்டாம் என்றும் சலீம் கூறியுள்ளார். அகற்றப்பட்ட நூல்கள் இரண்டும், கலாம் சிலைக்கு பின்புறமுள்ள கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டுள்ளது.