
செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாததால், கோவை தனியார் வங்கி காவலாளி மதுபோதையில் மாவட்ட ஆட்சியரகம் முன்பு தகராறில் ஈடுபட்டார்.
கருப்பு பணம் ஒழிப்பதற்கு பிரதமர் மோடி கடந்த 8-ந் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனால் மக்கள் பணத்தட்டுப்பாட்டால் மிகவும் பாதிப்படைந்துள்ளனா். ஆங்காங்கே மக்கள் விரக்தி அடைந்து காணப்படுவதை பாா்க்க முடிகிறது.
இந்நிலையில், கோவை கணபதி பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் அங்குள்ள தனியார் வங்கியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து பணத்தை மாற்ற முடியாமல் ஐயப்பன் தவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், மது அருந்திய நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மற்றொரு வாகனத்தில் இவர் மோதியதால் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த அதிகாரிகளை விமர்சித்து கடுமையான வார்த்தைகளில் ஐயப்பன் திட்டியுள்ளார்.
மேலும், இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்து தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து, தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த போலீசார் ஐயப்பனை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.