
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவுப்பகுதியின் நுழைவாயிலாகவுள்ள பாம்பனில் தெற்குவாடி மீன்பிடித் துறைமுகம் அருகே உள்ள கடற்கரை பகுதியில் மீனவர்கள் குடிசைகளில் வசித்து வருகின்றனர்.
மீன்பிடிக்கச் செல்ல வசதியாக கடற்கரை அருகே குடிசைகள் அமைத்து மீன்கம்பெனிகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மீன் கம்பெனிகளில் வலைகள் உட்பட மீன்பிடிசாதனங்கள் மற்றும் படகுகளுக்குத் தேவையான உதிரி பாகங்களையும் வைத்துள்ளனர்.
அத்துடன் கடலுக்குச் செல்லும்போது தங்கள் இருசக்கர வாகனங்களையும் இந்தக் கம்பெனிகளில் பாதுகாப்பாக வைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று அதிகாலை 2.10 மணிக்கு இந்த மீன்கம்பெனிகளில் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது.
இதுகுறித்துத் தகவலறிந்து மீனவர்கள் வந்து தீயை அணைக்க முயன்றனர். கடல்காற்றின் வேகத்தால் தீ மளமளவெனப் பரவியது. இந்தத் தீவிபத்தில் 16 மீன் கம்பெனிகள் எரிந்து சாம்பலானது. குடிசைகளில் வைக்கப்பட்டிருந்த வலைகள் உட்பட மீன்பிடி சாதனங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
மேலும் கம்பெனிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் 9 பைக்குகளும் தீக்கிறையாகின. தீ விபத்தில் 2 கோடிக்கும் அதிகமான மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த மீனவர்கள், தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றனர்.