2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்டோ கட்டணத்தை திருத்த வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு

First Published Dec 8, 2016, 9:26 AM IST
Highlights


இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்டோ கட்டணத்தை திருத்தி அமைக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் என்ற அமைப்பின் செயலாளர் லோகு என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இதுவரை இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை. ஆகையால், போக்குவரத்து துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப, 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண்களை ஆட்டோக்களில் எழுதி வைக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளித்தால், குறுஞ்செய்தி மூலம் பதிலளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி, தமிழக அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.கே.கவு, நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் மறுஆய்வு மனுவில் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என்பதை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று மாற்றுமாறு அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

கடந்த 2014ம் ஆண்டு கடைசியாக ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. 2 ஆண்டு கால அவகாசம் முடிந்து விட்டதால், கட்டணங்களை உயர்த்தியோ, குறைத்தோ மாற்றியமைப்பது குறித்து அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கிறோம் என்றனர்.

மேலும், பிரதான வழக்கின் விசாரணையை 2017 ஜனவரி 24ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

click me!