இனி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஆட்டோ கட்டணத்தை ஏற்ற வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு

First Published Dec 8, 2016, 1:11 PM IST
Highlights


இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்டோ கட்டணத்தைத் திருத்தி அமைத்துக்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம், ஒவ்வொரு, கிலோமீட்டருக்குமான கட்டணத்தை நிர்ணயித்து, 2014ல், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆட்டோ உரிமையாளர், டிரைவர் பெயர்கள் மற்றும் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்ணை, ஆட்டோக்களில் குறிப்பிடவும், பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கட்டணத்தை மாற்றி அமைக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்ற உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை என, அதிகாரிகளுக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில், கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் என்ற அமைப்பின் செயலாளர் லோகு என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  தொடர்ந்தார். பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுவரை இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை. ஆகையால், போக்குவரத்து துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இது தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அ‌ப்போது, தமிழக அரசின் மனுவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்டோ கட்டணத்தை திருத்தி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.‌ இதனை ஏற்ற நீதிபதிகள், 2014-இல் கடைசியாக ஆட்டோ கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டதாகவும், இரண்டு ஆண்டு கால அவகாசம் முடிந்து விட்டதால், கட்டணங்களை உயர்த்தியோ, குறைத்தோ மாற்றியமைப்பது குறித்து அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டனர். இது தொடர்பான பிரதான வழக்கின் விசாரணையை ஜனவரி 24-க்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

click me!