
கடலூர்
கடலூரில் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு பெண்கள் மற்றும் மக்கள் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் தாமாகவே கலைந்தூ சென்றனர்.
கடலூர் மாவட்டம், சிறுபாக்கம் அருகே மங்களூர் ஊராட்சியில் உள்ள வாணியத் தெருவில் 100–க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் கடந்த சில நாள்களுக்கு முன்பு பரவலாக பெய்த மழையால் தெருக்களில் தண்ணீர் தேங்கியது.
இந்த மழைநீர் வழிந்தோடி வடிகால் வசதி இல்லாததால் தேங்கி நிற்பதால் சாலைகள் அனைத்தும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.
இந்த நிலையில், “சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும், மழைநீர் வழிந்தோட வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்” என்று அப்பகுதி மக்கள் பலமுறை ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால், சினம் கொண்ட அப்பகுதி பெண்கள் மற்றும் மக்கள் விவசாயச் சங்க மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், இரத்தினசாமி, மகாலிங்கம், உதயசூரியன், அன்பழகன், ஆகியோர் முன்னிலையில் நேற்று காலையில் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணிநேரம் போராட்டம் நடைபெற்றும், பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால் அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
அப்போது, “இந்த பிரச்சனை தொடர்பாக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இதுகுறித்து முறையிடுவோம்” என்று அங்கிருந்து தாமாகவே கலைந்து சென்றனர்.