
கரூர்
கரூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவருக்கு வழி விடாததால் காரில் சென்றவரை தாக்கி அட்டூழியத்தில் ஈடுபட்டதால் சிறுவன் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாடி காலனியைச் சேர்ந்தவர் செல்வன்(48). இவர் தனது மோட்டார் சைக்கிளில் அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது முன்னாள் சென்ற கார் அவருக்கு வழி விடவில்லையாம். இதனால் காரில் சென்ற புளியங்காட்டு தோட்டம் இச்சிப்பட்டி பிரிவைச் சேர்ந்த குப்புசாமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார் செல்வன்.
இதில் செல்வன் தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும், காரில் சென்ற குப்புசாமி தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கைகல்ப்பு ஆனது.
இதில் காயம் அடைந்த செல்வன், அவரது மகன் அபிமன்யூ (23) மற்றும் 16 வயதுடைய ஒரு சிறுவன் ஆகிய மூவரும் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குப்புசாமி, புலியங்காட்டு தோட்டம் இச்சிப்பட்டி பிரிவை சேர்ந்த ஏகாம்பரம் (45), நல்லுசாமி(57), ராமசாமி (35) ஆகிய நால்வரும் பேரும் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் நல்லுசாமியும், ராமசாமியும் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் சிறுவன் உள்பட 7 பேர் மீதும் அரவக்குறிச்சி காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.