தொடர்ந்து சாராயம் விற்றுவந்த மூன்று பெண்கள் உள்பட ஐவர் குண்டர் சட்டத்தில் கைது – ஆட்சியர் உத்தரவு…

First Published Nov 8, 2017, 8:20 AM IST
Highlights
Arrested in the case of thieves-in-law including three women who have continued to sell - Collectors order ...


திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தொடர்ந்து சாராயம் விற்றுவந்த மூன்று பெண்கள் உள்பட ஐந்து பேர் ஆட்சியரின் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வழிப்பறி, கொலை, கொள்ளை, சாராய வியாபாரம் போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்கள் மீது காவலாளர்கள் கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்பேரில் ஆட்சியர் உத்தரவின்படி தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

போளூர் காவல் உட்கோட்டத்தில் தொடர்ந்து சாராயம் விற்றுவந்த முடையூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி கௌரி (41), பொத்தரை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த தருமன் என்பவரின் மனைவி கௌரி (38), வெலுக்கனந்தல் ராஜமாணிக்கம் என்பவரின் மனைவி பச்சையம்மாள் (55), நவரப்பாளையத்தைச் சேர்ந்த பாரதிராஜா (29), செங்குணத்தை சேர்ந்த ஆனந்தன் (42) ஆகிய ஐவரை கடந்த சில நாள்களுக்கு முன்பு போளூர் காவலாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததால் இந்த ஐந்து பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமிக்கு பரிந்துரைத்தார்.

அதன்படி இந்த ஐவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இதற்கான நகல் சிறையில் உள்ள அவர்களிடம் கொடுக்கப்பட்டது. 

click me!