
தருமபுரம் ஆதீனம் ஏற்பாட்டில் சென்னை காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 2025ம் ஆண்டு மே 2ம் தேதி மதுரை ஆதீனம் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது உளுந்தூர்பேட்டை - சேலம் ரவுண்டானா பகுதியில் மதுரை ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றாக மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை திட்டமிட்டே கொலை செய்ய சதி நடந்ததாக பரபரப்பு தகவலை தெரிவித்தார். இந்த விவகாராம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல்துறையினர் உளுந்தூர்பேட்டை - சேலம் ரவுண்டானா பகுதிகள் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
மதுரை ஆதீனம் பரபரப்பு புகார்
அதிவேகமாக காரை ஓட்டி சென்ற ஆதீனத்தின் கார் ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்து ஏற்பட காரணம் என தெரிய வந்தது. இந்த விபத்து குறித்து ஆதீனமோ அவரது ஆதரவாளர்களோ காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. மேலும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த முபாரக் என்பவரின் கார் மீது அதிவேகமாக சென்ற ஆதீனத்தின் கார் தான் மோதியது என்பதையும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் இவரது பேச்சு இரு மதத்தினருக்கு இடையே குழப்பத்தையும், மத மோதலையும் உருவாக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், ஆதீனத்துக்கு எதிராக தவறான தகவலை பரப்புதல், கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
முன் ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் மனுத்தாக்கல்
இந்நிலையில், தனக்கு எதிராக காவல்துறை பதிவு செய்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிமதுரை ஆதினத்திற்கு 60 வயதிற்கு மேல் ஆகிய உள்ளதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமென்றால் காவல்துறையினர் மதுரை ஆதீனம் இருக்கும் இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொள்ளலாம் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மதுரை ஆதீனத்திற்கு முன் ஜாமின் வழங்கியது.
அண்ணாமலை கண்டனம்
இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் மதுரை ஆதீனத்தை தொடர்ந்து துன்புறுத்தும் போக்கை, திமுக அரசின் காவல்துறை கைவிட வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் அவர்களுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி, தமிழக காவல்துறை மாண்புமிகு உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
உள்நோக்கம் கொண்டது
கடந்த சில நாட்களுக்கு முன்பாக, குடல் இறக்கம் அறுவைச் சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் மதுரை ஆதீனம் அவர்களை, இரண்டு நாட்களுக்கு முன்பு சென்று, விசாரணை என்ற பெயரில் சுமார் ஒரு மணி நேரம் துன்புறுத்தி விட்டு, தற்போது விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று திமுக அரசின் காவல்துறை கூறுவது, உள்நோக்கம் கொண்டது.
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. பத்து வயது குழந்தை மீது பாலியல் தாக்குதல் நடத்தியவனை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. கிட்னி திருடும் திமுக கும்பலை விசாரிக்க நேரமில்லை. காவல்துறையினருக்கே திமுகவினரால் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது. ஆனால், உப்புசப்பில்லாத காரணங்களைக் கூறி, மதச்சார்பின்மை என்ற பெயரில், யாரையோ திருப்திப்படுத்த, நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் மதுரை ஆதீனம் அவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தும் போக்கை, திமுக அரசின் காவல்துறை கைவிட வேண்டும். உடனடியாக, அவரது முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனுவைத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.