அமைச்சர்கள் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு.! என்ன நாடகம் அரங்கேற்றப்போகிறார் முதல்வர்-அண்ணாமலை கேள்வி

Published : Feb 27, 2025, 03:35 PM IST
அமைச்சர்கள் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு.! என்ன நாடகம் அரங்கேற்றப்போகிறார் முதல்வர்-அண்ணாமலை கேள்வி

சுருக்கம்

திமுக அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அண்ணாமலை முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக - பாஜக மோதல்

தமிழகத்தில் திமுக- பாஜக இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழக ஆளுநர் பங்கேற்ற விழாவில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொதிகை தொலைக்காட்சியில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் பங்கேற்ற நிலையில். அப்போது, தமிழ்த்தாயின் வாழ்த்தில் இடம்பெற்றுள்ள ’தெக்கணும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி விடப்பட்டு பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனத்தை பதிவு செய்திருந்தது. 

ஆளுநர் விழாவில் தமிழ்தாய் வாழ்த்து

இதனையடுத்து பொதிகை தொலைக்காட்சி சார்பாக மன்னிப்பு கேட்கப்பட்டது. மேலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியைத் தவறவிட்டு விட்டார். கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்ட விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடவில்லையென சர்ச்சை எழுந்துள்ளது. 3 அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் தமிழ்தாய் வாழ்த்து பாடாமல் விழா தொடங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

அமைச்சர்கள் விழாவில் தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிப்பு

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூரில், திமுக அமைச்சர்கள் திரு. MRK பன்னீர்செல்வம், திரு. பொன்முடி, திரு. நாசர் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் தொடங்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

அண்ணாமலை கேள்வி

இரண்டு மொழிக் கொள்கை என்ற பெயரில், தமிழகத்தில் தமிழ் மொழியே இல்லாத  தனியார் பள்ளிகள் கட்டமைப்பை உருவாக்கி, தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்கும் புதிய கல்வித் திட்டத்தைத் தங்கள் சுயலாபத்திற்காக எதிர்த்து, நாளொரு நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் திமுக, தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே, தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. தனது அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் அவமதிக்கப்பட்டுள்ளதற்கு, புதியதாக என்ன நாடகம் அரங்கேற்றப் போகிறார் முதலமைச்சர்?  என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

மாணவர்களுக்கு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அறிவுரை! கோலாகலமாக நடந்த பட்டமளிப்பு விழா !
Wayanad Landslide | வயநாடு கள்ளடி நிலச்சரிவு: இரவும் பகலும் தொடரும் மீட்புப் பணி