அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீதான நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தராக இருந்த சூரப்பா மீது ரூ.280 கோடி அளவுக்கு பல்வேறு ஊழல், முறைகேடு புகார்கள் எழுந்தன. கடந்த ஆட்சியின் போது, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார்களை விசாரிப்பதற்கு சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுரப்பா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த , உயர்நீதிமன்றம் விசாரணை ஆணையம் அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. அண்மையில் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார் குறித்த விசாரணையை நிறைவு செய்து அறிக்கையை முதலமைச்சரிடம் நீதியரசன் கலையரசன் தாக்கல் செய்தார். இதனிடையே அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சூரப்பா மீதான குற்றச்சாட்டினை விசாரித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்தது. மேலும் விசாரணை ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்டதால் இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல என்றும் சூரப்பா பதவிக்காலத்தில் சில முறைகேடுகள் நடந்துள்ளதாக ஆணையம் கண்டறிந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து விசாரணை ஆணையத்தின் மீதான தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்றும், முன்னாள் துணை வேந்தர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த நடவடிக்கைகளை தொடரப் போகிறீர்களா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். மனுதாரர் தொடர் அச்சத்திலேயே இருக்க முடியுமா? இது ஊழலாக இருந்தால் விட மட்டோம் என்றும் நீதிபதி தெரிவித்தார். அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் கூறியதையடுத்து, விசாரணையை டிசம்பர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.