அனிதாவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
மருத்துவ படிப்பில் சேர இயலாத விரக்தியில் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா மரணம் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. அனிதாவின் மரணத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களையும் இரங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அனிதா மரணமடைந்ததை அடுத்து, அவரது உடல் அரியலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், பிரேத பரிசோதனை முடிந்தவுடன், குழுமூரில் உள்ள அவரது வீட்டில் அனிதாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
அனிதாவின் மரணத்துக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை, அரியலூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அனிதாவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. சுமார் 90 சதவீத கடைகள் அங்கு அடைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குகள் மற்றும் மருந்துகடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.