தமிழகத்தில் 6.5 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும் பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
அரசு பணியாளர் காலியிடங்கள்
தமிழகத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அரசு ஊழியர்களாக உள்ளனர். அரசு ஊழியர்கள் தான் அரசுக்கும் மக்களும் இடையே பாலமாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பேர் பணி ஓய்வு பெறுகிறார்கள். அந்த காலி பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்பாமல் பல இடங்களில் காலியாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சமாக அதிகரித்திருப்பதாக அரசு ஊழியர் அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன. இதன் காரணமாக மக்களுக்கு உதவிதிட்டங்களை உடனடியாக சென்று சேர்க்க முடியாத நிலை உள்ளது.
திமுக தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு.?
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழக அரசுத் துறைகளில் மூன்றரை லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், மேலும் 2 லட்சம் பணியிடங்களை புதிதாக உருவாக்கி அவற்றையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், அந்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்பதுடன், கடந்த நான்காண்டுகளில் கூடுதலாக ஏற்பட்ட மூன்று லட்சம் காலியிடங்களையும் திமுக அரசு நிரப்பவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாக கடந்த நான்காண்டுகளில் 34,384 பேருக்கு மட்டும் தான் அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தும், பதிவு செய்யாமலும் 1.30 கோடி பேர் அரசு வேலைவாய்ப்புகளுக்காக காத்திருக்கும் நிலையில் ஆண்டுக்கு பத்தாயிரம் பேருக்கு மட்டும் அரசு வேலை வழங்குவது இளைய தலைமுறையினருக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும் என விமர்சித்துள்ளார்.
6.50 பணியிடங்களை நிரப்புங்கள்
அரசுப் பணியிடங்களை நிரப்பாததன் மூலம் சமூகநீதிக்கும் பெரும் துரோகத்தை திமுக அரசு இழைத்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை என்பது மட்டுமின்றி, எல்லா பணியிடங்களிலும் ஒப்பந்த முறையிலும், குத்தகை அடிப்படையிலும் தான் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அத்தகைய நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை.
அதனால், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறது என்று பெருமிதம் கொள்வதில்லை எந்த அர்த்தமும் இல்லையென கூறியுள்ளார். மூச்சுக்கு முன்னூறு முறை சமூக நீதி என்று பெருமை பேசிக் கொள்ளும் மு.க.ஸ்டாலினுக்கு உண்மையாகவே சமூகநீதியிலும், இளைஞர் நலனிலும் அக்கறை இருந்தால், தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6.50 லட்சம் காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.