கடந்த ஒரு வாரமாக செயலிழந்து போயிருந்த ஏர்செல் சேவை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. உங்களது ஃபோனை ஆஃப் பண்ணிட்டு மீண்டும் ஆன் பண்ணினால் சேவை தெளிவாக கிடைக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் 6 ஆவது மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்செல் கடந்த ஒரு வாரமாக செயலிழந்து போனது. தமிழகம் உட்பட பல இடங்களில் ஏர்செல் நிறுவனத்தில் செல்லிடப்பேசி சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டடது. காலிங், மெசேஜ், டேட்டா என அனைத்து வசதிகளும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இதனால், அந்நிறுவனத்தின் சிம்கார்டுகளை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், ஏர்செல் நிறுவனத்தைப் போல் டெலிகாம் சந்தையில் இருக்கும் ஏர்டெல், ஜியோ போன்ற மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாததால் ஏர்செல் நிறுவனம் விரைவில் கடையை சாத்தவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.
இதனால், ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் அவர்கள் பகுதியில் இருக்கும் ஏர்செல் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின், தொலைத்தொடர்பு கோபுரங்களை ஏர்செல் நிறுவனம் பயன்படுத்தி வந்தது. ஆனால் அந்த நிறுவனத்துடன் ஏர்செல் நிறுவனத்துக்கு நிதி தொடர்பான பிரச்சனை இருந்து வந்ததது, இதையடுத்து அவர்கள் திடீரென கோபுரங்களை மூடிவிட்டதால், சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேறு நிறுவனத்திற்கு மாறும் வசதியை, பீதி காரணமாக, லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள், ஒரே நேரத்தில் பெற முயற்சித்ததால், அந்த, ‘சர்வர்’ செயலிழந்துவிட்டது.” என்று ஏர்செல் நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.மேலும் விரைவில் இப்பிரச்சனை சரி செய்யப்படும் எனவும் அறிவித்தது.
இந்நிலையில் ஏர்செல் நிறுவனம் தற்போது செயல்படத் தொடங்கி விட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஏர்செல் நிறுவனத்தின் , தென் மாநில தலைவர், சங்கரநாராயணன், உங்களது செல்போனை ஃபோனை ஆஃப் பண்ணிட்டு மீண்டும் ஆன் பண்ணினால் சேவை தெளிவாக கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். ஏர்செல் வாடிக்கையாளர்களும் இதை உறுதி செய்துள்ளனர்.