இளம் பெண்ணை கர்ப்பிணியாக்கிய எய்ட்ஸ் நோயாளி! திண்டுக்கல் அருகே அதிர்ச்சி!

By vinoth kumarFirst Published Oct 7, 2018, 12:06 PM IST
Highlights

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே எய்ட்ஸ் நோய் இருப்பதை மறைத்து திருமணம் செய்ததால் இளம் பெண் கர்ப்பிணியாக இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே எய்ட்ஸ் நோய் இருப்பதை மறைத்து திருமணம் செய்ததால் இளம் பெண் கர்ப்பிணியாக இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பழனி அருகே பாப்பம்பட்டியை சேர்ந்த 30 வயது நபர் ஒருவர், சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். திருமணம் ஆனதில் இருந்தே கடும் நோயால் பாதிக்கப்பட்ட அவர், அடிக்கடி மருந்து சாப்பிடுவதை மனைவி கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், எவ்வளவு மருந்து சாப்பிட்டாலும் தமது கணவரின் உடல் நிலை சரியாகவில்லை என்பதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இளம்பெண்ணின் கணவரை பரிசோதித்த மருத்துவர்கள், சுமார் ஓராண்டுக்கு மேல் அவரது கணவருக்கு எய்ட்ஸ் நோய் இருக்கும் விவரத்தை தெரிவித்ததுடன், அவர் சாப்பிட்ட மருந்துகள் அனைத்துமே எய்ட்ஸ் நோயாளிகளுக்கான மருந்து தான் என்றும் விவரித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண், இது குறித்து தமது கணவர் மற்றும் கணவர் வீட்டாரிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார். 

இதையடுத்து, இளம்பெண்ணை கணவரும், கணவரின் வீட்டாரும் அடித்து உதைத்து, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். ஒரு மாதத்திற்கு மேல் அடி- உதையை தாங்க முடியாத அந்த இளம்பெண், ஸ்ரீரங்கத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். தமது கணவருக்கு எய்ட்ஸ் நோய் இருக்கும் விவரத்தை பெற்றோரிடம் கூறியதோடு, அவர்கள் செய்த கொடுமைகளையும் விவரித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்ற நிலையில், உறவினர்கள் சிலரின் ஆலோசனையை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பாப்பம்பட்டி சேர்ந்த அந்த நபருக்கு சில தவறான பழக்க வழக்கங்களால் எய்ட்ஸ் நோய் தொற்று நோய் ஏற்பட்டதும், அதை மறைத்து இளம்பெண்ணை திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபர் மீது, திட்டமிட்டு ஏமாற்றுதல், பெண்ணை கொடுமை செய்தல், வேண்டுமென்றே தீங்கு விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.

இதனிடையே இளம்பெண் தற்போது 6 மாத கர்ப்பமாக இருப்பதால் அவருக்கும் எய்ட்ஸ் நோய்த் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறியுள்ள மருத்துவர்கள், அவரை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். இந்த விவகாரம் இளம் பெண்ணின் பெற்றோருக்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!