மேகதாது தொடர்பாக பேச தமிழக அரசுக்கு உரிமை இல்லையா..! பாஜக அரசிற்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்

By Ajmal KhanFirst Published Jun 16, 2022, 10:01 AM IST
Highlights

 மேகதாது அணை குறித்து பேச தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என்று சொல்லும் கர்நாடகாவிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கு உரிமை இல்லையா?

மேகதாது அணை கட்டுவது குறித்து பேச தமிழகத்திற்கு உரிமை இல்லையென கூறிய கர்நாடக அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், காவேரி நதிநீர்ப் பங்கீட்டைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் முழு உரிமை உண்டு. இது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பன்மாநிலங்களுக்கான நதிநீர்ப் பங்கீட்டில் கீழ்மடை மாநிலங்களின் அனுமதி இல்லாமல் மேல்மடை மாநிலம் தன்னிச்சையாக அணை கட்டிக் கொள்ள வழிவகை இல்லை. இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டிற்கு வரும் காவேரி ஆற்றின் நீரைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் மேகதாது அணை கட்டப்படும் என்று சொல்கின்றபோது அதை எதிர்க்கின்ற உரிமை தமிழ்நாட்டிற்கு நிச்சயம் எனவே, தமிழ்நாட்டிற்கு மேகதாது அணை குறித்து பேச உரிமை இல்லை ன்று சொல்லும் கர்நாடக மாநில முதலமைச்சரின் கூற்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரானது மட்டுமல்லாமல் கடும் கண்டனத்திற்குரியது. இது ஒரு புறமிருக்க, கர்நாடக மாநில நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள், பெங்களூரு மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மேகதாது அணை கட்ட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், இதை எதிர்ப்பது மனிதாபிமானமற்ற செயல் என்றும் கூறியிருக்கிறார். இது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

கர்நாடக அரசுக்கு கண்டனம்

 தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்து விடுவதைத் தடுக்கும் வகையில் மேகதாது அணையைக் கட்ட திட்டமிட்டிருக்கும் செயல்தான் மனிதாபிமானமற்ற செயல் என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து 17-06-2022 அன்று நடைபெறவுள்ள 16-வது காவேரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக செய்தி வந்த நிலையில், தமிழ்நாட்டிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இந்தக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதோடு, மேற்படி கூட்டம் 23-06-2002 அன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. காவேரி மேலாண்மை வாரியத்தின் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டாலும், மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்கப்படாது என்று அறிவிக்கப்படவில்லை. காவேரி மேலாண்மை ஆணையத்தின் முக்கியமான பணி என்பது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவேரி நீரின் இருப்பை கண்காணிப்பது, பிரித்தளிப்பது, முறைப்படுத்துவது மற்றும் கட்டுக்குள் வைத்திருப்பது ஆகும். இதைவிடுத்து, தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான மேகதாது அணை கட்டும் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து காவேரி மேலாண்மை வாரியத்தில் விவாதிக்கப்படும் என்று கூறுவது ஆணையத்தின் அதிகார வரம்பை மீறிய செயலாகும். அதிகார வரம்பிற்கு உட்படாத, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு பொருளை ஆணையம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது சரியாக இருக்காது. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காவேரி மேலாண்மை வாரியத்தில் மேகதாது அணை கட்டுதல் குறித்து விவாதிப்பதை தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

click me!