
தருமபுரி
தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளை மாநிலம் முழுவதும் மீண்டும் தொடங்க வேண்டும் என்று விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு மனு கொடுத்து காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மனு கொடுத்து காத்திருக்கும் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ரவி தலைமை தாங்கினார். சங்க மாவட்டத் தலைவர் அர்ச்சுணன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகிகள் ராமச்சந்திரன், கந்தசாமி, மனோகரன், கோவிந்தசாமி, பூபதி, மீனாட்சி, சுசிலா, பெரியசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இந்த போராட்டத்தில் "தேசிய ஊரக வேலைஉறுதிதிட்ட பணியை அனைத்து குடும்பங்களுக்கும் தொடர்ந்து முழுமையாக வழங்க வேண்டும்.
ஊரக வேலை உறுதிதிட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
நடப்பு ஆண்டில் போதிய மழை பெய்யாததால் விவசாய பணிகள் முடங்கி பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு வறட்சி காலத்தில் 150 நாட்கள் வேலை வழங்க வேண்டும்.
தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட பணிகளை மீண்டும் மாநிலம் முழுவதும் தொடங்க வேண்டும்.
வேலைஅட்டை பெற்றுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் முழுமையான வேலை மற்றும் கூலி கிடைக்கும் வகையில் தொழிலாளர் பட்ஜெட்டுகளை தயார் செய்ய வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.