
வடகிழக்கு பருவமழை துவங்கிய பின் சென்னை நகர பகுதிகளில் தற்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக சென்னையை வாட்டி வதைத்து வந்த வெயிலினால் மக்கள் குடிக்கவே தண்ணீர் இன்றி தவித்து வந்தனர். கோடை காலம் முடிந்துள்ள நிலையில் தற்போது தான் வருண பகவான் சென்னை பக்கம் கண்திறந்து பார்த்துள்ளார். அவரது கடைக்கண் பார்வையால் கடந்த மூன்று தினங்களாக ஆங்காங்கே சிறி அளவில் மழை பெய்தது.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன் படி இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென குளிந்த காற்று வீசியது. வாகனங்களில் சென்றவர்கள் சில்லென்ற காற்றினால் சிலுத்த நிலையில் புயல் வேகத்தில் மழை பொழிய தொடங்கியது. சுமார் 1 மணிநேரம் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ததால் சென்னை மக்கள் குஷியாகினர். ஒருசில இடங்களில் மழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல் சென்னை புறநகர் பகுதிகளிலும் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. பரங்கிமலை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், கிண்டி, வேளச்சேரி, பள்ளிக்கரணை, ஆதம்பாக்கம, உள்பட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
மேலும், ஆவடி, பட்டாபி ராம், குரோம்பேட்டை, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம் போரூர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.