திருச்சி
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களில் 13 பேரை கொன்ற காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனித உரிமை ஆணையத்தை தே.மு.தி.க.வினர் வலியுறுத்தி உள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது காவலாளர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து திருச்சி மாவட்டம், சிந்தாமணி அண்ணா சிலை அருகில் நேற்று தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தே.மு.தி.க. தொழிற்சங்கத்தின் மாநில துணை தலைவர் முஜிபுர் ரகுமான் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் டி.வி.கணேஷ், கிருஷ்ண கோபால், குமார் ஆகியோர் பேசினர்.
இதில், அவைத் தலைவர் அலங்கராஜ், பொருளாளர் மில்டன் குமார், நிர்வாகிகள் பிரீத்தா, மகளிர் அணி பாக்கியம் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், "துப்பாக்கி சூடு நடத்தி மக்களின் உயிரை பறித்த காவலாளர்கள் மீது மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி அரசு பதவி விலக வேண்டும்" உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.