தாற்காலிக ஓட்டுநர்களால் தொடரும் விபத்துகள்... என்ன செய்யப் போகிறது அரசு?

First Published Jan 7, 2018, 3:56 PM IST
Highlights
accidents happened by part time drivers


போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால், பொது மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கையை மீட்க, தாற்காலிக ஓட்டுநர்களைக் கொண்டு அரசுப் பேருந்துகளை ஓட்டுவதற்கு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதனால், பல இடங்களில் தாற்காலிக ஓட்டுநர்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. ஆனால், சில இடங்களில் முறையான பயிற்சி, அனுபவம் இன்மையால் விபத்துகள் நேரிடுகின்றன. 

ஞாயிறு இன்று காலை சென்னை சந்தோம் அருகே மாநகரப் பேருந்து மோதி பைக்கில் சென்ற இளைஞர் பலியானார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

 சென்னை சந்தோம் அருகே மாநகரப் பேருந்து மோதியதில், பைக்கில் சென்ற இளைஞர் உயிரிழந்ததால், இந்த விபத்தை ஏற்படுத்திய பேருந்தை ஓட்டியவர் தாற்காலிக ஓட்டுனரா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்தை தொடர்ந்து சாந்தோம் சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. 

இன்று காலை கடலூர் நெல்லிக்குப்பம் அருகே தாற்காலிக ஓட்டுநர் இயக்கி வந்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்து, சாலையோரம் சென்றது. பின் சாலையை விட்டு இறங்கி, வயலில் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு பெண் காயம் அடைந்தார். பயணிகள் உயிர் தப்பினர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தாற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்தார். சென்னையைச் சேர்ந்த சீயோன், சரண் பிரீத்தி மற்றும் ஷியாம் ஆகிய மூவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். விருத்தாசலம் பேருந்து நிலையத்தை அவர்கள் கடந்து கொண்டிருந்தபோது அவர்களுக்கு முன்னால் சென்ற அரசுப் பேருந்து, பேருந்து நிலையத்துக்குள் நுழைய முற்பட்டது.

அப்போது பின்னால் வந்த மற்றொரு அரசுப் பேருந்தும், பேருந்து நிலையத்துக்குள் செல்ல முயன்ற போது, இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் அந்த இரு பேருந்துகளுக்கு நடுவில் சிக்கிக் கொண்டனர். இதனால் பின்னால் வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பேருந்து மீது மோதியது. இதில்,  இரு பேருந்துகளுக்கும் இடையே சிக்கிக் கொண்ட சீயோன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் படுகாயம் அடைந்த மற்ற இருவரும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்தின் தாற்காலிக ஓட்டுநர் ஏழுமலை என்பவரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது போல், சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆவடி சென்ற மாநகரப் பேருந்து, ஆவடி பணிமனைக்குச் சென்றபோது, பணிமனை சுற்றுச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகள் அதில் இருந்து இறங்கி அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். 

இப்படி சில இடங்களில் விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

click me!