ஆடி கிருத்திகை ஸ்பெஷல் - அம்மனுக்கு பால் குடம் ஏந்தியும், அலகு குத்தியும் அடியார்கள் ஊர்வலம்; சிறப்பு பூசையும் நடந்தது...

First Published Aug 6, 2018, 1:52 PM IST
Highlights

ஆடி கிருத்திகையை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் பால் குடம் ஏந்தியும், அலகு குத்தியும் அடியார்கள் ஊர்வலம் சென்றனர். 

தமிழர்களின் திருவிழாக் காலங்களில் மிகவும் முக்கியமானது ஆடி மாதம் தான். சாதாரணமாகவே வெள்ளிக் கிழமை என்றால் சிறப்பு வாய்ந்ததுதான். எனினும் ஆடி வெள்ளி என்றால் அது இன்னும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

ஆடி மாதத்தில் அம்மன் மற்றும் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், அன்னதானம், கூழ் வார்த்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதுமுள்ள கோயில்களில் நடப்பது வழக்கம்.

அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள மின்நகர் முருகன் கோயில், ராஜீவ்நகர் தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பால் குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் இருந்து அடியார்கள் தங்களது தலையில் பால்குடத்தை ஏந்திக் கொண்டும், நாக்கு, கன்னம், கைகளில் அலகு குத்திக் கொண்டும் ஊர்வலம் சென்றனர். ஊர்வலம் முழுவதும் மேள, தாளங்கள் வாசிக்கப்பட்டன.

இந்த ஊர்வலம் செயங்கொண்டம் சாலை, ஆட்சியர் அலுவலகம் வழியாக மின்நகர் முருகன் கோயில் மற்றும் தேவி கருமாரியம்மன் கோயிலுக்கு சென்றது. அங்கு முருகன் மற்றும் அம்மனுக்கு அடியார்கள் தலையில் சுமந்துவந்த பாலைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான அடியார்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் கண்டனர். பின்னர், கோயிலில் நடைப்பெற்ற அன்னதானத்திலும் பங்கேற்றனர். 

இதேபோன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூசைகள், பால் குடம் ஏந்துதல், அன்னதானம் மற்றும் கூழ் வார்த்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன். இதில், ஏராளமான அடியார்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் கண்டனர்.

click me!