
ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு காளைகளை அடக்கவும் ஆதார் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற, மத்திய அரசு ஆதாரை கட்டாயமாக்கி வருகிறது. சிலிண்டர் மானியம், மதிய உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்கள் மதிய உணவை பெற என பல்வேறு திட்டங்களுக்கு ஆதாரை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. மொபைல் எண், பான் எண், வங்கிக் கணக்கு ஆகியவற்றுடனும் ஆதாரை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களும் ஆதார் எண்ணை சமர்ப்பிப்பது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் நெருங்கிவிட்ட நிலையில், ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் சூடுபிடித்துள்ளன. வரும் 14ம் தேதி, பொங்கலன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. அதற்காக காளைகள் மற்றும் வீரர்கள் முன்பதிவு செய்துவருகின்றனர்.
காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களிடம் ஆதார் எண் கேட்கப்படுகிறது. அரசின் நலத்திட்டங்களுக்கு அப்பாற்பட்டு ஜல்லிக்கட்டில் கலந்துகொள்வதற்குக் கூட ஆதார் எண் அவசியமாக்கப்பட்டுள்ளது.