திருச்சியில் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்த இளைஞர் ஒருவர், 3500 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த சம்பவம் நடந்துள்ளது. தவறி விழுந்த இளைஞரை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே சஞ்சீவி பெருமாள் கோயில் உள்ளது. இந்த சஞ்சீவி பெருமாள் கோயில் 3500 அடி உயரத்தில் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள், சாமி தரிசனம் செய்தும் தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தியும் வழிபட்டு வருகின்றனர்.
இந்த மாதம் புரட்டாசி என்பதால் சஞ்சீவி பெருமாள் கோயிலுக்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் வருகை தந்துள்ளனர். அப்படி வரும் பக்தர்கள் மலை உச்சில் அமைந்துள்ள பெருமாள் கோயிலின் பிரகாரத்தை சுற்றி வருவார்கள்.
கோயில் பிரகாரத்தை சுற்றி வருவதற்கு இடமே இல்லை என்று கூறப்பட்டாலும், கோயில் அமைந்துள்ள பாறைகளின் வழியே பக்தர்கள் பிரகாரத்தை சுற்றி வருவர்.
அப்படி ஒரு பக்தர் கோயில் பிரகாரத்தை சுற்றி வரும்போது, தவறி விழுந்த சம்பவம் நடந்துள்ளது. சாமி தரிசனம் செய்த அந்த இளைஞர், கோயில் பிரகாரத்தை சுற்றி வர முயன்றுள்ளார். ஆனால், பிரகாரத்தை சுற்றிவர சென்ற அந்த இளைஞர், தவறி விழுந்தார்.
இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் கோயில் நிர்வாகத்துக்கு தகவல் அளித்தனர். கோயில் நிர்வாகத்தினர், போலீசுக்கு போன் மூலம் தகவல் அளித்தனர்.
பின்னர் அங்கு வந்த போலீசார், இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோயில் பிரகாரத்தை சுற்றி வரும்போது தவறி விழுந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
கோயில் பிரகாரத்தை சுற்றி வர வேண்டாம் என்று கோயில் நிர்வாகம் எச்சரிக்கை பலகை வைத்திருந்தும், பக்தர்கள் ஆபத்தான இந்த வழியில் கோயில் பிரகாரத்தை சுற்றி வருகின்றனர்.
குறுகிய மலைப்பாதையில் கோயில் பிரகாரத்தை சுற்றி வருவதால் உயிரிழப்பு ஏற்படுவதாகவும், இது குறித்து கோயில் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.