வங்க கடலில் உருவாகியுள்ள புயல் இன்று இரவு சென்னை நெருங்கும் நிலையில், அதிக காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வட மாவட்டங்களை அச்சுறுத்தும் புயல்
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவரம் அடைந்து வருகிறது. இந்தநிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக உருமாறியுள்ளது. இந்த புயலானது சென்னையை ஒட்டி வட கடலோரப்பகுதியில் நிலவக்கூடும் இதன் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை அறிவித்துள்ள தமிழக அரசு
இந்தநிலையில் கன மழை பாதிப்பு காரணமாகவும், சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய துறையான காவல், தீயணைப்பு, மருத்துவம், உணவு விடுதிகள், பால் விநியோகம், மின்சார துறை ஆகியவை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்