
திருச்சி
ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், "65 முறை மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத திருச்சி கூட்டுறவு சங்க இணை பதிவாளரை மாற்றம் செய்யவேண்டும்" என கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது.
இதற்கு மாவட்ட ஆட்சியர் பழனிசாமி தலைமை வகித்தார். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் உதுமான் முகைதீன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ரவிச்சந்திரன் ஆகிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டம் தொடங்கியதும் மருங்காபுரி தாலுகா கௌண்டம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணை தலைவர் வெங்கிடுசாமி, சண்முக வேலாயுதம் உள்ளிட்ட விவசாயிகள் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், “கௌண்டம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. அதனால், கூட்டுறவு கடன் சங்க தலைவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை,
கடன் தள்ளுபடி செய்யப்படவேண்டிய பட்டியலில் இருந்து 313 சிறு மற்றும் குறு விவசாயிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கு பதிலாக பெரும் விவசாயிகளுக்கு விதிமுறைகளை மீறி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு முறைகேடு நடந்துள்ளது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளரிடம் 65 முறை மனு கொடுத்தும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என மனு கொடுத்து ஆட்சியர் முன் வந்து நின்று முழக்கங்களையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து கூட்டுறவு சங்க இணை பதிவாளர் மீது கூறப்பட்ட புகார் பற்றி விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்தார் ஆட்சியர்.