சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 7 வயது சிறுமி டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமி உயிரிழப்புக்கு மருத்துவனை நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம் என பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், டெங்குவின் தாக்கம் அதிகரித்தே வருகிறது.
தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகளவில் இருந்து வந்தாலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்தக்கோரி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அரசை தொடரந்து வலியுறுத்தி வருகிறது.
டெங்குவால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் அம்பத்தூரை சேர்ந்த யமுனா என்ற சிறுமி டெங்குவால் பாதிக்கப்பட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் சிறுமியின் உயிரிழப்புக்கு மருத்துவமனையின் அலட்சிய போக்கே காரணம் என பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.