
திருவாரூர்
பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கொரடாச்சேரியில் சாலை மறியல் போராட்டம் நடத்திய 50 விவசாயிகளை காவலாளர்கள் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் கடந்த 2012-13-ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படாததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தினர். அப்படியிருந்தும், இதுவரை பயிர் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை.
இதனைக் கண்டித்து கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகில் விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் சேதுராமன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இப்போராட்டத்தில், “அறிவிப்பு இல்லாத மின் தடையால் கோடை சாகுபடி பாதிக்கபட்டுள்ளது.
ஆறு, குளம், ஏரி போன்ற நீர் நிலைகளை விவசாயிகள் கொண்ட குழுவை அமைத்து உடனடியாக தூர்வார வேண்டும்.
பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த கொரடாச்சேரி காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர்.
இந்த மறியல் போராட்டத்தால் திருவாரூர் - தஞ்சை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.