
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் 445 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டு இருக்கிறது என்றும் அதனைப் போக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று ஆட்சியர் ரவிகுமார் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் குடிநீர் வழங்கல் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று காலை ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜாராம், உமாமகேசுவரி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் வரவேற்றுப் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் ரவிகுமார் கூறியது:
“தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணியில் இருந்து 25 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வறட்சியைக் கருத்தில் கொண்டு கடந்த ஜனவரி மாதம் 7–ஆம் தேதி முதல் தொழிற்சாலைக்கு ஆற்றில் இருந்து தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான தண்ணீரை பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் ஆயிரத்து 761 குக்கிராமங்கள் உள்ளன. இதில் ஆயிரத்து 378 குக்கிராமங்களில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. மீதமுள்ள 383 குக்கிராமங்களில் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்குவதற்கான பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டு வருகிறது. மே மாதம் இறுதிக்குள் இந்த பணிகள் முடிக்கப்படும். இதனால், அனைத்துக் கிராமங்களுக்கும் தாமிரபரணி தண்ணீர் சென்றடையும்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு மூன்று நாள்களுக்கு ஒரு முறையும், கோவில்பட்டி நகரசபைக்கு எட்டு நாள்களுக்கு ஒருமுறையும், காயல்பட்டினம் நகரசபைக்கு மூன்று நாள்களுக்கு ஒருமுறையும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 19 நகர பஞ்சாயத்துக்கள் உள்ளன. இதில் கழுகுமலை, ஆறுமுகநேரி, திருச்செந்தூர், ஆத்தூர் ஆகிய நான்கு நகர பஞ்சாயத்துக்களை தவிர 15 நகர பஞ்சாயத்துக்களிலும் தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
அதே நேரத்தில் மாவட்டத்தில் 445 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் குடிநீர்த் தேவையை பூர்த்திச் செய்வதற்காக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் குழு அமைத்து மாதம் தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன” என்று ஆட்சியர் ரவிகுமார் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ராஜாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், தூத்துக்குடி உதவி கலெக்டர் தீபக்ஜேக்கப், மாவட்ட வன அலுவலர் ராஜேஷ்குமார் ஜக்கினியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.