
கோயம்புத்தூர்
பாதாள சாக்கடைத் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது என்றும் தரமற்ற ஒப்பந்ததாரருக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் கோயம்புத்தூரில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினர் 40 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டத்தில் உயர் தொழில் நுட்பம் எதுவும் இல்லை தரமற்றது என்றும், திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது என்றும் பொள்ளாச்சி நகர ம.தி.மு.க-வினர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று காலை 11 மணிக்கு பொள்ளாச்சி வெங்கடேஸ்வரா காலனியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து ம.தி.மு.க-வினர் ஊர்வலமாக புறப்பட்டு நகராட்சி அலுவலகத்தை நோக்கி வந்தனர். நகராட்சி அலுவலகம் முன்பு வந்தபோது அவர்களை காவலாளர்கள் தடுப்பு வேலி அமைத்து தடுத்தனர்.
இதனால் அலுவலகத்திற்குள் சென்று போராட்டம் நடத்த முடியாததால், நகராட்சி நுழைவு வாயில் முன்பே முற்றுகைப் போராட்டத்தை நடத்தி பின்பு, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் துரைபாய் தலைமை வகித்தார். மாவட்டச் செயலளர் குகன் மில் செந்தில் முன்னிலை வகித்தார். மாநில இளைஞர் அணிச் செயலாளர் ஈஸ்வரன் பங்கேற்றுப் பேசினார்.
மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் விக்னேஷ், சேதுபதி, இளைஞரணி துணை அமைப்பாளர் மோகனசுந்தரம், ஒன்றியச் செயலாளர்கள் கல்யாணி, திருமலைசாமி, சிங்கை சக்தி, நகர துணைச் செயலாளர் மறுமலர்ச்சி முரளி உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், “பொள்ளாச்சி நகரப் பகுதியில் ரூ.110 கோடியில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டத்தில் எந்தவிதமான உயரிய தொழில்நுட்பமும் கடைப்பிடிக்கப்படவில்லை.
நீண்ட கால பயன் தரக்கூடியவகையில், தரமான பணிகள் நடைபெறவில்லை. பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட இடங்களில் பணிகள் முடிந்தும் மூடப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பயங்கர முறைகேடு நடந்துள்ளது. தகுதி இல்லாத ஒப்பந்ததாரரால் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான முறையில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
பின்னர், அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ம.தி.மு.க.வினர் 40 பேரை பொள்ளாச்சி கிழக்கு காவலாளர்கள் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை வேனில் ஏற்றி அருகில் உள்ள காவல் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.