
தேனி
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 380 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
குடும்பநல ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 இலட்சம் வழங்க வேண்டும்.
சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு பணிக்கொடை ரூ.3 இலட்சம் வழங்க வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைப்பெற்றது.
அதன்படி, தேனி மாவட்டத்தில் பள்ளிவாசல் தெருவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நேரு சிலை அருகில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் செய்தனர்.
இந்த ஊர்வலத்திற்கு மாவட்டத் தலைவர் நிலவழகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முருகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பாக கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முகமதுஅலிஜின்னா பேசினார்.
பின்னர், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 380 பேரை தேனி காவலாளர்கள் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.