
செம்மரங்களைக் கடத்த முயன்றதாக ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்ட தமிழர்கள் 32 பேர், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி, திருப்பதிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 பேரை, ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா போலீசார் ரயில் நிலையத்தில் கைது செய்தனர். போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், இவர்கள் அனைவரும் ரேணிகுண்டா அருகே உள்ள வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்த போது, கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் அவர்களை ரயிலிலிருந்து இறக்கி போலீசார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 32 பேரையும், ஜாமீனில் எடுத்து வழக்கிலிருந்து விடுவிக்க தமிழக அரசு சார்பில் 2 வக்கீல்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனு, திருப்பதி 4-வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட 32 தமிழர்களுக்கும் ஜாமீன் வழங்கி, நீதிபதி விஜயா உத்தரவிட்டார்.