எட்டு வழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்து போராடிய 30 பேர் கைது; தருமபுரியை அதிரவைத்த கம்யூனிஸ்டு பார்டி...

First Published Aug 7, 2018, 11:42 AM IST
Highlights

விவசாயிகளை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.

தருமபுரி மாவட்டம், அரூர் கச்சேரி மேட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நேற்று நடந்த இந்தப் போராட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் சின்னச்சாமி தலைமை வகித்தார்.

போராட்டத்தை கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் துளசி மணி தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் தேவராஜன், துணைச் செயலாளர் தமிழ் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தப் போராட்டத்தில், "சேலம் - சென்னை இடையே ஏற்கனவே மூன்று வழித்தடங்கள் உள்ளன. இந்த நிலையில் சென்னையில் இருந்து சேலம் செல்ல எட்டு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

இந்த எட்டு வழிச்சாலையால் 4500 ஏக்கர் விவசாய நிலங்கள், 1500 ஏக்கர் வன நிலங்கள் பாதிக்கப்படும். இந்த சாலையால் நீர் நிலைகள், விவசாயக் கிணறுகள், வீடுகள், அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் அழிக்கப்படும். 

எனவே, விவசாயிகளை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் இந்த சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கோபால், முருகன், மாதேசுவரன், விசுவநாதன், நடராசன், வெங்கடாச்ஸ்ம், செங்கொடி, ராஜி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.  அரசு அனுமதியின்று மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தியதால் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர்  30 பேரை காவலாளர்கள் கைது செய்தனர். 

click me!