திண்டுக்கல்லில் தலைவர்களின் சிலைகளுக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு...

First Published Mar 9, 2018, 9:48 AM IST
Highlights
24-hour cycle Police protection for leaders statues in Dindigul


திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர், காமராசர், பெரியார் சிலைகளுக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் நிறுவப்பட்டிருந்த சோவியத் ரஷ்யாவின் மறைந்த தலைவர் லெனின் சிலை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இதனால், அந்த மாநிலத்தில் மார்க்சிஸ்ட் -  பா.ஜ.க தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. 

அதனைத்  தொடர்ந்து லெனின் சிலையை போன்றே பெரியார் சிலையையும் உடைக்க வேண்டுமென்று எச்.ராஜா தெரிவித்தார். இதற்கு கண்டன குரல்கள் எழுந்து கொண்டிருந்தது.

இந்த வேளையில் கடந்த 6-ஆம் தேதி வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதனைக் கண்டித்து திராவிடர் கழகம், தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம், எச்.ராஜாவின் உருவபொம்மை எரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டனர். இதனால் தமிழகத்தில் சில இடங்களில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. 

இதனையடுத்து நேற்று முன்தினம் தமிழகம் முழுவதுமுள்ள பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை, பிரதான சாலையில் உள்ள காமராசர், பெரியார், அண்ணா சிலை, திருச்சி சாலையில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலைகளுக்கும் பாதுகாப்புக்காக காவலாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

மேலும், மாவட்டத்தில் முக்கியமான இடங்களில் உள்ள தலைவர்களின் சிலை மற்றும் சமத்துவபுரங்களில் உள்ள பெரியாரின் சிலைகளுக்கு பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!