அதிர்ச்சி தரும் அபராத தொகை... இத்தனை கோடி வசூலானதா? ஷாக் கொடுத்த காவல்துறை!!

By Narendran SFirst Published Oct 17, 2022, 8:30 PM IST
Highlights

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த ஆறு மாதங்களில் சுமார் 23.25 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த ஆறு மாதங்களில் சுமார் 23.25 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முன்னதாக போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. பின்னர் மார்ச் 2018 முதல் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை பணமில்லா இ-சலான் முறைக்கு மாற்றப்பட்டது. இந்த இ-சலான் முறைக்கு பின் போக்குவரத்து விதிகளை மீறுவோர் பலர் அபராதம் செலுத்தாததால் வசூலாக வேண்டிய அபராதம் தேக்கமடைந்தது. இந்தச் சிக்கலை எதிர்கொண்ட GCTP, கால் சென்டர் முறையை அறிமுகப்படுத்த முடிவுசெய்தது. இதனால் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கடந்த 11.04.2022 அன்று 10 கால் சென்டர்களை திறந்து வைத்தார். மேலும் அண்ணா நகர் TROZ மற்றும் மையப்படுத்தப்பட்ட ANPR கேமரா அமைப்பு மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைக் கையாள்வதற்காக மேலும் இரண்டு தனித்தனி அழைப்பு மையங்கள் பின்னர் சேர்க்கப்பட்டுள்ளன. 11.04.2022 முதல் 10.10.2022 வரை 6 மாதங்கள் கால் சென்டர்களின் செயல் திறன் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: சிறுவனின் உயிரை பறித்த குளிர்பானம்.. ஆசிட் கலந்த குளிர்பானத்தால் நேர்ந்த விபரீத சம்பவம்

இந்த 12 காவல் அழைப்பு மையங்களிலிருந்து தொலைபேசி வாயிலாக நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் வழக்குகள், சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் அபராதம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. தவறும் பட்சத்தில் மேற்படி வழக்குகள் மெய்நிகர் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படும் என்று தொலைபேசி வாயிலாக அறிவுறுத்தப்பட்டது. இதன் மூலம் இந்த 6 மாதங்களில் 3,85,068 வழக்குகளுக்கு அபராதம் செலுத்தப்பட்டு மொத்தம் ரூ.6,01,45,160 அபராத தொகையாக மார்ச் 2019 இல் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உட்பட பழைய வழக்குகளுக்கும் செலுத்தப்பட்டது. இம்முறையின் ஒரு பகுதியாக, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் அபராதம் செலுத்துவதற்கான சிறப்பு அம்சமும் இதில் தொடங்கப்பட்டது. இதன் விளைவாக குடிபோதையில் வாகன ஓட்டுநர்களுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டதில் மொத்தம் 6,108 வழக்குகளில் ரூ.6,07,66,000 அபராதமாக விதி மீறல்களுக்கு வசூலிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: யமகா நிறுவன பிரச்சனையில், முதலாளிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு.? மண்ணில் மக்களுக்கு துரோகம்.. கொதிக்கும் சீமான்.

இதனால் 3,86,886 பழைய வழக்குகளுக்கு ரூ.7,65,35,160 அபராதமாகவும், புதிதாக பதிவான 5,31,687 வழக்குகளில் ரூ.15,59,75,421 அபராதமாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் இந்த 6 மாதங்களில் மொத்தம் 9,18,573 வழக்குகளில் ரூபாய்.23,25,10,581-னை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்துவதற்கான வசதியை மேம்படுத்த, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை மொத்த குறுஞ்செய்தி அமைப்பையும் புதிதாக தொடங்கியுள்ளது மற்றும் கட்டண வசதியை எளிமை படுத்துவதற்காக பல கட்டண மையங்களின் தளங்களை ஒன்றினைக்க QR Code மூலமாக எளிய முறையில் அபராத தொகையை செலுத்த வசதி செய்துள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் இந்த வாய்ப்பை மீண்டும் ஒரு முறை பயன்படுத்தி அனைத்து வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனத்திற்கு எதிராக ஏதேனும் வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை ஆன்லைனில் சரிபார்த்து, அபராதத் தொகையை விரைவில் செலுத்துமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

click me!