சென்னையில் உறுப்புகளை தானமாக வழங்கி இருவருக்கு உயிர் கொடுத்த ஒன்றரை வயது குழந்தை

By Velmurugan sFirst Published Jan 7, 2023, 10:16 AM IST
Highlights

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை மூளைச்சாவு அடைந்த நிலையில், குழந்தையின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு இருவருக்கு மறு வாழ்வு அளிக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூரைச்சேர்ந்த தம்பதியரின் ஒன்றரை வயது ஆண் குழந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் குழந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

கரூரில் சாயப்பட்டறை கழிவுகளால் விவசாயம் பாதிப்பு; அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை

இதனைத் தொடர்ந்து கடந்த 2ம் தேதி குழந்தை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி கடந்த 5ம் தேதி மூளைச்சாவு அடைந்தது. நீண்ட நாட்களாக போராடி குழந்தையின் உயிரை மீட்டுக் கொண்டுவர முடியவில்லை என்ற வருத்தத்தில் பெற்றோர் அழுதுகொண்டிருக்க, குழந்தையின் உடல் உறுப்புகள் சீராக இருப்பதால், அதனை தானமாக வழங்குவது குறித்து பெற்றோரிடம் மருத்துவர்கள் எடுத்துக் கூறினர்.

கவலையின் உச்சத்தில் இருந்த நிலையிலும், மருத்துவரின் கோரிக்கையை ஏற்ற பெற்றோர் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். அதன்படி குழந்தையின் கல்லீரல் மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 மாத குழந்தைக்கும், சிறுநீரகங்கள் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 19 வயது பெண்ணுக்கும் வழங்கப்பட்டது.

பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வரவில்லையா? இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி, மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். குழந்தையின் பெற்றோருக்கு பலரும் தங்களது பாராட்டு நிறைந்த கவலையை தெரிவித்துக் கொண்டனர்.

click me!