
கன்னியாகுமரி
கேரளாவுக்கு காரில் கடத்தப்பட்ட 1500 லிட்டர் மண்ணெண்ணெயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய ஓட்டுநரை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேசன் பொருட்கள் அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தடுப்பதற்காக பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கண்காணிப்பின்போது அவ்வப்போது கடத்தல் பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் பறக்கும்படை தாசில்தார் ராஜசேகர் தலைமையில் துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தும்படி சைகை காட்டினார்கள். ஆனால், ஓட்டுநர் நிறுத்தாமல் காரை வேகமாக ஓட்டிச்சென்றார். அந்த காரை அதிகாரிகள் துரத்திச் சென்று அம்மாண்டிவிளை அருகே சந்திப்பில் மடக்கிப் பிடித்தனர்.
அதிகாரிகள் மடக்கியதும் காரில் இருந்த ஓட்டுநர் தப்பியோடி விட்டார். அதன்பின்னர் அதிகாரிகள் காரில் சோதனை செய்தபோது, பிளாஸ்டிக் கேன்களில் மானிய விலையில் படகுகளுக்கு பயன்படுத்தப்படும் 1500 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மண்ணெண்ணெயை பறிமுதல் செய்து இனயம் அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட காரை கல்குளம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், முதற்கட்ட விசாரணையில் கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்த முயன்றது தெரியவந்தது.
இந்தக் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் யாருடையது? அந்த காரை ஓட்டி வந்தது யார்? போன்றவற்றை தெரிந்துகொள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.