Public exam : 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? விளக்கினார் அமைச்சர் அன்பில் மகேஷ்!!

By Narendran SFirst Published Dec 28, 2021, 2:38 PM IST
Highlights

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் இறுதி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் இறுதி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவியுள்ளது. இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 653 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 142, மகாராஷ்டிராவில் 141, கேரளாவில் 57, குஜராத்தில் 49, தெலங்கானாவில் 41, தமிழ்நாட்டில் 34, கர்நாடகாவில் 31 மற்றும் ராஜஸ்தானில் 43 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 183 பேர் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனிடையே கொரோனா காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். அதற்கு முந்தைய கல்வியாண்டில் 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

கொரோனாவால் மாணவர்களின் கல்வி, குறிப்பாக தேர்வு எழுதும் பழக்கம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்வி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ பள்ளி பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி 3வது வாரத்தில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளில் பழைய கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், முதற்கட்டமாக பழைய கட்டடங்கள் உள்ள 1,600 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவைகளை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  2022 ஜனவரி மாதத்தில் பள்ளிகளுக்குத் திருப்புத் தேர்வு நடைபெறும். 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் இறுதி வாரம் அல்லது மே மாதத்தில் பொதுத் தேர்வு நடைபெறும்.

2022 ஜனவரி முதல் வாரம் 3 ஆம் தேதி பள்ளிகள் திட்டமிட்டப்படி தொடங்கும். ஒமைக்ரான் பரவலால் சுழற்சி முறை வகுப்புகள் நடத்துவது குறித்தோ, ஆன்லைன் வழி கல்வி முறையை பின்பற்றுவதோ குறித்தோ முதலமைச்சர் அலுவலக ஆலோசனையின்படி முடிவெடுப்போம் என்று தெரிவித்தார். இதற்கிடையில், ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருவதால், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைனில் வகுப்புக்களை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது. ஒமைக்ரான் அச்சுறுத்தலால் டெல்லி, உத்தரப்பிரதேசம், அசாம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை குறித்து டிசம்பர் 31 ஆம் தேதி முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. அதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!