
100 நாள் ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மேலும் 50 நாட்கள் நீட்டிப்பு…மத்திய அரசு அனுமதி…
வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் மாநிலங்களை காக்கும் வகையிலும்
கிராமப் புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காகவும் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இத்திட்டத்திற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் என யெரிடப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதையடுத்து கடும் வறட்சி நிலவி வருகிறது. தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
கிராமப் புறங்களில் விவசாயம் பொய்த்துப் போனது. கருகும் பயிர்களைப் பார்த்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாரடைப்பால் இறந்துபோயுள்ளனர். விவசாயிகள் ஏதாவது கூலிவேலை கிடைக்காதா என தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகம் வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டது இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தைத் மேலும் 50 நாட்கள் நீட்டித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் 'மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் தமிழகத்தில் 150 நாள் வேலைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசின் கோரிக்கைப்படி கூடுதலாக 50 நாட்கள் வேலை தர மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசு இதற்கு அனுமதி அளித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள குட்டைகள், ஏரிகள் தூர்வாரப்படும். பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்படும் வேலை நாட்கள் நீட்டிப்பால் 1.23 கோடி கிராம தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.