
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்களின் அறப்போராட்டம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் 250க்கு மேற்பட்டோரை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர். இதை அறிந்ததும், சென்னை மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கர்ணாஸ் தலைமையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில், ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவாக மனித சங்கிலி போராட்டம் நடந்து வருகிறது.
இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டுள்ளனர். மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த வேண்டும். பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும். மத்திய அரசு அவசர சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என கோஷமிட்டனர்.