நேற்று சுஜித்... இன்று ருத்ரன்... 3 வயது சிறுவனுக்கு எமனான மழை நீர் தொட்டி...!

By vinoth kumarFirst Published Oct 30, 2019, 4:01 PM IST
Highlights

விருதுநகர் அருகே மழைநீர் சேகரிப்புக்காக தோண்டிய குழியில் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் அருகே மழைநீர் சேகரிப்புக்காக தோண்டிய குழியில் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் மூர்த்தியின் மகன்தான் ருத்ரன். இச்சிறுவன், ஒண்டிப்புலி நாயக்கனூரிலுள்ள தாத்தா மணிகண்டன் வீட்டுக்கு சென்று இருந்தான். மணிகண்டன் மழைநீர் சேகரிப்பு  அமைப்பதற்காக தனது வீட்டிற்கு வெளியே மூன்று அடிக்கு மேல் ஆழத்தில் ஒரு குழி தோண்டி இருந்தார். நேற்று இரவு முழுவதும் பெய்த மழையால் குழி மழைநீரில் நிரம்பி இருந்தது. 

இன்று காலை மழை சற்று ஓய்ந்த நேரத்தில் சிறுவன் ருத்ரன் வீட்டின் வெளியே விளையாடியதாக தெரிகிறது. அப்போது தண்ணீர் நிரம்பியிருந்த மழைநீர் தொட்டிக்குள் ருத்ரன் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தான். அப்போது, திடீரென சிறுவன் காணவில்லை என்று அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். பின்னர், மழைநீர் தொட்டிக்காக வெட்டப்பட்ட குழியில் சிறுவன் மூழ்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு சிறுவன் கண்ணிசேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதையடுத்து குடும்பத்தினர் அலறித் துடித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மழைநீர் தொட்டிக்குள் சிறுவன் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் சுஜித் தவறி விழுந்து இறந்த துயரம் மறையும் முன் விருதுநகரில் ருத்ரன் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

click me!