பிஞ்சு குழந்தையை கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்த துளசிக்கு மனநல பாதிப்பா? மருத்துவர்கள் சொன்ன முக்கிய தகவல்..!

By vinoth kumarFirst Published Aug 30, 2021, 2:13 PM IST
Highlights

துளசிக்கும், கணவர் வடிவழகனுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து ஆந்திராவில் உள்ள தாயாரின் வீட்டில் விட்டு வந்த பின்னர் துளசியின் செல்போனில் குழந்தையின் சித்தரதைக்கு உள்ளான காட்சிகள் இருந்தது தெரியவந்தது. 

பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கி வீடியோ வெளியிட்ட செஞ்சியை சேர்ந்த துளசிக்கு மனநல பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, துளசி செஞ்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்த உள்ளனர்.

2 வயது குழந்தையை பெற்ற தாயே கண்மூடித்தனமாக தாக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணப்போரை பதற வைத்த இந்த காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மோட்டூரை சேர்ந்த துளசி என்பவர் தான் குழந்தையை சித்ரவதை செய்தவர் என கண்டுபிடிக்கப்பட்டது. 

துளசிக்கும், கணவர் வடிவழகனுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து ஆந்திராவில் உள்ள தாயாரின் வீட்டில் விட்டு வந்த பின்னர் துளசியின் செல்போனில் குழந்தையின் சித்தரதைக்கு உள்ளான காட்சிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சத்தியமங்கலம் காவல்துறையினர் துளசி மீது சிறார் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

மேலும், ஆந்திரா விரைந்த காவல்துறையினர் சித்தூரில் துளசியை கைது செய்து இன்று காலை சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் 2 மணிநேரம் விசாரணை நடத்தினர். துளசி மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்ததால் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு மனநல பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், துளசிக்கு மனநல பாதிப்பு எதுவும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, செஞ்சி குற்றவியல் நீதிமன்றத்தில் துளசியை ஆஜர்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

click me!