விழுப்புரத்தில் 20 அடி பள்ளத்தில் தொங்கிய லாரி; அவசரம் தாங்காமல் அதிகாரிகளோடு மல்லுகட்டிய திமுக எம்எல்ஏ

By Velmurugan sFirst Published Mar 18, 2024, 10:47 AM IST
Highlights

விழுப்புரத்தில் மேம்பாலத்தில் விபத்தில் சிக்கிய கனரக லாரியை அதிகாரிகள் போராடி மீட்டுக் கொண்டிருந்த நிலையில் திமுக எம்எல்ஏ அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடியில் இருந்து பேப்பர் பண்டல்களை ஏற்றி கொண்டு புதுச்சேரி நோக்கி டிரெய்லர் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. இன்று காலை விழுப்புரம் அருகே உள்ள ஜானகிபுரம் மேம்பாலத்தில் வந்த போது திடீரென நிலைத்தடுமாறி பாலத்தின் தடுப்பு கட்டுகளை இடித்துக் கொண்டு 20 அடி பள்ளத்தில் லாரியின் முகப்பு தொங்கியபடி விபத்துக்குள்ளாது. 

 

லாரியை ஓட்டி வந்த சின்ன தம்பி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரியில் கொண்டு செல்லப்பட்ட பேப்பர் பண்டல்கள் மேம்பாலத்தில் சிதறி விழுந்தன. இதனால் சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாகவும், திருச்சியில் இருந்து சென்னை மார்க்கமாகவும் என இரு திசைகளிலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருப்புறத்திலும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 

இரட்டை இலை விவகாரத்தில் இன்று தீர்ப்பு வெளியாகும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் திருச்செந்தூரில் சிறப்பு வழிபாடு

விபத்து குறித்து தகவலறிந்ததும் விழுப்புரத்தில் இருந்து போலீசாரும், மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் மேம்பாலத்தின் குறுக்கே கவிழ்ந்து கிடந்த கண்டெய்னர் லாரியையும், சாலையில் சிதறி கிடந்த பண்டல்களையும் சரி செய்தனர். 

பிதமரின் பிரசாரத்திற்காகவே 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது - கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

இதனிடையே லாரியை மீட்கும் பணியில் காவல் துறையினர், மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் எதிர் திசையில் வந்த  கள்ளக்குறிச்சி திமுக மாவட்ட செயலாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் தனது காரை அனுமதித்துவிட்டு பின்னர் மீட்பு பணியில் ஈடுபடுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எம்எல்ஏவுக்கு எதிராக கேள்வி எழுப்பியதால் வசந்தம் கார்த்திகேயன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்த சம்பவம் காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருப்புறத்திலும் போக்குவரத்தை போலீசார் முற்றிலுமாக நிறுத்தி வைத்தனர். விபத்தில் சிக்கிய லாரி மீட்கப்பட்டதத் தொடர்ந்து போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. இதனால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

click me!