72 மாணவர்களை ஈவு இரக்கம் இல்லாமல் பிரம்பால் தாக்கிய ஆசிரியர்.. பணியிடை நீக்கம் !

By vinoth kumarFirst Published Jul 20, 2022, 2:30 PM IST
Highlights

செஞ்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 72 மாணவர்களை துணை தலைமை ஆசிரியர் தாக்கியதை அடுத்து அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

செஞ்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 72 மாணவர்களை துணை தலைமை ஆசிரியர் தாக்கியதை அடுத்து அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 1100 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில், 12ம் வகுப்பு மட்டும் 120 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் இயற்பியல் பாட ஆசிரியரும், உதவி தலைமை ஆசிரியருமான நந்தகோபால கிருஷ்ணன் வகுப்பில் படிக்கக்கூடிய மாணவர்கள் 72 பேரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால், மாணவர்கள் உடல் முழுவதும் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, சம்பவத்தை அறிந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் ஆவேசமடைந்து தலைமை ஆசிரியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தால் செஞ்சி அரசு பள்ளியில் பதற்றமான சூழல் நிலவியது. இதனால், அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். 

இதனையடுத்து செஞ்சி வட்டாட்சியர் பள்ளிக்கு வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பெற்றோர்கள் கலைந்து சென்றனர். இந்த விவகாரம் கல்வித்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டு  நந்தகோபால கிருஷ்ணனை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இயற்பியல் பாடத்தில் மாணவர்கள் குறைவான மதிப்பெண் வாங்கியதன் காரணமாக உதவி தலைமை ஆசிரியர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!