ரிஷிவந்தியம் அருகே பயங்கர வெடி சத்தம்: வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை!

By Manikanda PrabuFirst Published Aug 16, 2023, 8:07 PM IST
Highlights

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே வெடி சத்தம் கேட்டது தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள மையனூர், மெய்யூர் பகுதியில் இன்று நண்பகல் 12 மணிக்கு பயங்கர வெடி சத்தம் கேட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் மோகன்ராஜும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு, போலீசாருக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கினார். தொடர்ந்து, பல மணி நேரமாக சுற்றுவட்டாரப் பகுதியில் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ட்ரோன் மூலமாகவும் போலீசார் தேடி வருகின்றனர்.

திடீரென உதயநிதியின் காரை நோக்கி கைக்குழந்தைகளுடன் ஆவேசமாக பாய்ந்த தம்பதியர்

இதனிடையே, வெடி சத்தம் குறித்து பல்வேறு வதந்திகளும் அப்பகுதியில் பரவி வருகிறது. திருக்கோவிலூர் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதாகவும், அதன் காரணமாகவே சத்தம் கேட்டதாகவும் வீடியோ ஒன்று பரவி வருகிறது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே வெடி சத்தம் கேட்டது தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்கோவிலூர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக வீடியோ உள்ளூர் வாட்ஸ் அப் குழுக்களில் பரவி வருகிறது. அந்த வீடியோ 2021ஆம் ஆண்டு ஊட்டியில் நடந்தது என விளக்கம் அளித்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை, அமைதியை குலைக்கும் விதமாக பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

click me!