தந்தையின் சடலத்திற்கு முன் திருமணம் செய்து கொண்ட மகன்... நெகிழ்ச்சி சம்பவம்..!

By vinoth kumarFirst Published Aug 10, 2019, 11:12 AM IST
Highlights

திண்டிவனத்தில் ஆசிரியர் ஒருவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், திடீரென அவரது தந்தை உயிரிழந்தார். இதனையடுத்து, மறைந்த தந்தையின் சடலம் முன், அவரது ஆசியுடன் வீட்டிலேயே திருமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனத்தில் ஆசிரியர் ஒருவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், திடீரென அவரது தந்தை உயிரிழந்தார். இதனையடுத்து, மறைந்த தந்தையின் சடலம் முன், அவரது ஆசியுடன் வீட்டிலேயே திருமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சிங்கனூர் கிராமத்தை சேர்ந்த தெய்வமணி-செல்வி தம்பதியரின் மகன் அலக்சாண்டர் (30). இவரும், மயிலம் அடுத்த கொணமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரி (27) ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் மயிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர்.  

இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் வருகின்ற 2-ம் தேதி மயிலம் முருகன் கோயிலில் திருமணமும், அன்று மாலை திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. திருமண வேலைகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தெய்வமணி நேற்று காலை திடீரென உயிரிழந்தார். திருமணம் நடக்க இருந்த நிலையில் தந்தை உயிரிழந்ததால் அவரது குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. 

மேலும், தந்தையின் ஆசிர்வாதத்துடன் திருமணம் நடக்கவில்லை என்ற ஏக்கம் அலக்சாண்டருக்கு இருந்தது. உடனே, உறவினர்களை அழைத்து எனது தந்தை இறந்தாலும் அவரது சடலத்தின் முன் எனது திருமணம் நடக்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து உறவினர்கள் கொணமங்கலத்தில் உள்ள ஜெகதீஸ்வரி மற்றும் அவரது பெற்றோரிடம் நடந்ததை எடுத்துக்கூறி திருமணத்திற்கு சம்மதம் பெற்றனர். 

இதனையடுத்து, சிங்கனூரில் உள்ள அலக்சாண்டரின் இல்லத்தில் தெய்வமணி சடலத்தின் முன் இருவரின் திருமணம் நடந்தது. முன்னதாக தெய்வமணி கையில் தாலியை வைத்து ஆசீர்வாதம் பெற்றபின் அலக்சாண்டர் கண்ணீர் மல்க ஜெகதீஸ்வரி கழுத்தில் தாலியை கட்டினார். அப்போது அங்கு கூடியிருந்த உறவினர்களும் அழுதனர். தந்தை இறந்த பிறகும் அவரது உடலிடம் ஆசிர்வாதம் பெற்று காதலியை ஆசிரியர் திருமணம் செய்த சம்பவம் காண்போரை நெகிழ செய்துள்ளது.

click me!