உதயமானது புதிய திருப்பத்தூர் மாவட்டம்..! வேலூரிலிருந்து பிரிந்தது..!

By Manikandan S R SFirst Published Nov 28, 2019, 10:57 AM IST
Highlights

தமிழகத்தின் 35 வது மாவட்டமாக திருப்பத்தூர் இன்று உருவாகியது.

நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அதே போல திருநெல்வேலி மாவட்டமும் இரண்டாக பிரிக்கப்பட்டு திருநெல்வேலி, தென்காசி என உருவாக்கப்பட்டது.  

புதிய மாவட்டங்களுக்கான அரசாணையை தமிழக சமீபத்தில் வெளியிட்டது. அதில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களில் எந்தெந்த தாலுகாக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு புதிய மாவட்டங்களுக்கான ஆட்சியர்களும் காவல்துறை கண்காணிப்பாளர்களும் அறிவிக்கப்பட்டிருந்தனர். மாவட்ட தொடக்க விழா முதல்வர் தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி வேலூரில் இருந்து பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்று வருகிறது. முதல்வர் பழனிசாமி மாவட்டத்தை வைத்து சிறப்புரை ஆற்றி வருகிறார். விழாவில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட இருக்கிறது. துணை முதல்வர் பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக தென்காசி மாவட்டத்தை கடந்த 22 ம் தேதி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அதன்பிறகு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான தொடக்க விழா நேற்று முன்தினம் முதல்வர் தலைமையில் நடந்தது.

புதிய மாவட்ட தொடக்கவிழாவை முன்னிட்டு திருப்பத்தூர் நகரம் தூய்மைப்படுத்தப்பட்டு சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. வழிநெடுகிலும் அதிமுகவின் கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. விழா நடைபெறும் மைதானத்தில், எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகியோரின் பிரம்மாண்ட கட்டவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.

click me!