ஜெயிலில் இருந்து கொண்டே உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சாராய வியாபாரி.. பதவியேற்க அனுமதிக்குமாறு மனு..!

By vinoth kumarFirst Published Oct 19, 2021, 1:12 PM IST
Highlights

ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கிருஷ்ணன், ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட வளையாம்பட்டு ஊராட்சி 9-வது வார்டில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். தேர்தலில் போட்டியிட்ட கிருஷ்ணனுக்கு சீப்பு சின்னம் ஒதுக்கப்பட்டது. தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு வெற்றிபெற்ற சாராய வியாபாரியை, பதவி ஏற்க அனுமதிக்க கோரி அவரது மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (45). இவர் மீது சாராயம் விற்பனை செய்ததாக காவல் நிலையங்களில் 4 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கிருஷ்ணன், ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட வளையாம்பட்டு ஊராட்சி 9-வது வார்டில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். தேர்தலில் போட்டியிட்ட கிருஷ்ணனுக்கு சீப்பு சின்னம் ஒதுக்கப்பட்டது. தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். 

இவரை எதிர்த்து அதே வார்டில் 4 பேர் போட்டியிட்டனர். இந்நிலையில், கடந்த 3-ம் தேதி லாலா ஏரி பகுதியில் லாரி டியூப்கள் மற்றும் கேன்களில் 150 லிட்டர் சாராயத்தை மறைத்து வைத்திருந்ததாக கிருஷ்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்ததில் பதிவான 373 வாக்குகளில், கிருஷ்ணன் 194 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

இந்நிலையில்,  கிருஷ்ணன் மனைவி ராஜேஸ்வரி குடும்பத்தினருடன் சென்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், காவல் துறையினர் பொய் வழக்குப் போட்டு அவரை சிறையில் அடைத்துள்ளனர். தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர் வார்டு உறுப்பினராக பதவி ஏற்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

click me!