அந்தரத்தில் தொட்டில் .. கயிறு கட்டி இறக்கப்படும் சடலம் .. அதிகாரிகள் விசாரணை தொடக்கம் ..

By Asianet TamilFirst Published Aug 22, 2019, 1:02 PM IST
Highlights

வேலூர் அருகே சாதியைக் காரணம் காட்டி சடலத்தை கொண்டு செல்ல மறுப்பு தெரிவித்ததால் பாலத்தில் இருந்து தொட்டில் கட்டி பிணத்தை இறக்கிய சம்பவத்தில் அதிகாரிகள் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர் .
 

வேலூர் மாவட்டம்  நாற்றம்பள்ளி அடுத்து இருக்கிறது அலசந்தாபுரம் கிராமம் . இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊரில் இருந்து சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் தனியார் நிலங்கள் இருக்கின்றன . இறந்து போனவர்களின் உடல்களை சாதியை காரணம் காட்டி அந்த வழியாக கொண்டு செல்ல நில உரிமையாளர்கள் அனுமதி மறுத்துள்ளதாக தெரிகிறது .

இந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த குப்பன் என்பவர் சாலை விபத்தில் பலியாகி இருக்கிறார் . இதனால் அவருக்கு இறுதிச்சடங்குகளை செய்வதற்காக உடலை சுடுகாட்டிற்கு கிராம மக்கள் கொண்டு சென்றுள்ளனர் .அப்போது தனியார் நிலம் வழியாக செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது . பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது .

இதனால் கிராம மக்கள்  குப்பனின் உடலை ஒரு தொட்டிலில் கட்டி , அதை பாலத்தில் தொங்க விட்டு கீழே இறக்கி உள்ளனர் . அதன்பிறகு உடலை சுமந்து சென்று சுடுகாட்டில் எரியூட்டியுள்ளனர் .

இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளி நேற்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவியது . பல்வேறு தரப்பில் இருந்தும் இதற்கு கண்டனங்கள் வந்த வண்ணம் இருந்த நிலையில் அரசின் கவனத்திற்கு சென்றுள்ளது .

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி வாணியம்பாடி வட்டாச்சியர் , வருவாய்த்துறை ஆட்சியர்  , காவல்துறை அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணையை தொடங்கி இருக்கின்றனர் .

click me!