அதிவேகத்தில் மோதி நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம்..! சாவு வீட்டுக்கு சென்ற மூவர் பரிதாப பலி..!

By Manikandan S R SFirst Published Jan 25, 2020, 10:49 AM IST
Highlights

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கிரிசமுத்திரம் என்கிற இடத்தின் அருகே இருசக்கர வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போது அவர்கள் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருக்கிறது வடசேரி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் தமிழ் சுந்தர்(24), சந்தோஷ் (20) மற்றும் வேலு (25). நண்பர்களான மூவரும் மேளம் அடிக்கும் தொழில் பார்த்து வருகின்றனர். சாவு வீடு போன்ற துக்க நிகழ்வுகளுக்கு சென்று மேளம் அடிப்பது இவர்களது வழக்கம். நேற்று கேத்தாண்டப்பட்டியில் ஒருவரின் இறப்பிற்கு மேளம் அடிக்க மூன்று பேரும் அழைக்கப்பட்டனர். இதற்காக ஒரு இருசக்கர வாகனத்தில் மூவரும் சென்றனர்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கிரிசமுத்திரம் என்கிற இடத்தின் அருகே இருசக்கர வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போது அவர்கள் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தமிழ் சுந்தர் மற்றும் வேலு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர். படுகாயமடைந்த சந்தோஷ் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் சந்தோஷை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தகவலறிந்து வந்த காவலர்கள் பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட சந்தோஷ் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலையும் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் மோதிவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: அசுர போதையில் 5 பேருடன் பைக்கில் பறந்த வாலிபர்..! நீதிபதி கொடுத்த விநோத தண்டனை..!

click me!